கம்ப்யூட்டர் என்கிற சாதனம் எதிர்காலத்தில் பயன்பாட்டில் இருக்குமா என்பது தெரியவில்லை. ஏனெனில் எல்லா சேவைகளும் இப்போது செல்போன் மூலமே எளிதாக கிடைக்கிறது. அதனால் அடுத்த 50 முதல் 100 வருடங்களில் கம்ப்யூட்டர் இருப்பது சந்தேகம் தான். சரி அது ஒரு புறம் இருக்கட்டும் இப்ப காணாமல் போய்க்கொண்டிருக்கும் கம்ப்யூட்டர் என்னவென்று தெரியுமா?
கம்ப்யூட்டர் சயின்ஸ் படிப்பு தான் படிப்படியாக காணாமல் போய்க்கொண்டு இருக்கிறது. எல்லா பிரிவுகளை சேர்ந்தவர்களுக்கும் கம்ப்யூட்டர் பற்றி ஓரளவுக்கு விஷயம் தெரிந்திருப்பதால் அதை தனியாய் ஒரு பாடமாக எடுத்துப்படிக்க மாணவர்களிடையே ஆர்வம் குறைந்து வருகிறது. தமிழ்நாட்டில் உள்ள கலை, அறிவியல் கல்லூரிகளில் சேருவதற்கு நடைபெற்று வரும் கவுன்சிலிங்கில் பெரும்பாலான மாணவர்கள் பி.ஏ.தமிழ் பிரிவில் சேருவதற்கு தான் விண்ணப்பம் கொடுத்து வருகின்றனராம். தி டீரென நம்ம புள்ளைங்களுக்கு தமிழ் படிப்பின் மீது ஆர்வம் ஏற்பட என்ன காரணம் என்று ஆராய்ந்து பார்த்தால் அதற்கு காரணம் தமிழக அரசு தான்.
தமிழ்நாடு அரசுப்பணிகளில் சேர வேண்டுமானால் TNPSC நடத்தும் தேர்வுகளை எழுதி பாஸ் பண்ணியாக வேண்டும். சும்மா பாஸ் பண்ணினால் போதாது. தமிழ் மொழியை நன்கு தெரிந்து வைத்திருக்க வேண்டும். தமிழ் கட்டாயத்தேர்வு நடைமுறை போட்டித்தேர்வுகளில் கொண்டுவரப்பட்டுள்ளதால் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் தமிழக அரசுப்பணிகளில் சேர நல்ல வாய்ப்பு உருவாகியுள்ளது. காலம் காலமாக ஆங்கிலவழிக்கல்வி படித்து வந்த பலரும் தற்போது அரசு வேலை வாங்க வேண்டும் என்ற எண்ணத்தில் தமிழ் மொழியில் பாடம் படிக்க துவங்கியுள்ளனர்.
மாணவர்களிடையே தற்போது தமிழ் ஆர்வம் அதிகரித்துள்ளதன் காரணமாக பி.ஏ.தமிழ் பிரிவில் சேர விண்ணப்பங்கள் அதிக அளவில் குவிந்து வருவதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றது. தமிழை வளர்ப்பதற்கு என்ன செய்ய வேண்டும் என யோசித்து அதை கச்சிதமாக செய்துள்ளது தமிழக அரசு. தமிழ் பற்றி தெரியாதவங்க யாரும் அரசுப்பணியில் சேர வாய்ப்பில்லை என்பதால் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பலரும் ஆர்வத்துடன் தமிழ் படித்து வருகின்றனர் என்றால் பார்த்துகொள்ளுங்கள்.