திருடர்களாக இருந்தாலும் அவர்களை நல்வழிப்படுத்தி சரியான பாதையில் பயணிக்க வைத்தால் அவர்களை வைத்து மற்ற திருடர்களை பிடித்து விட முடியும். இந்த யுக்தி பல திரைப்படங்களில் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. படத்தில் மட்டுமல்ல நிஜத்திலும் இதுபோன்ற துணிச்சலான விஷயங்கள் நடந்திருக்கிறது. சில நூற்றாண்டுகளுக்கு முன் ஆஸ்திரேலியாவில் நடந்த ஒரு சுவாரசியமான விஷயத்தை பற்றி தெரிந்து கொள்ளலாம் வாருங்கள்.
ஆஸ்திரேலியாவில் இருக்கும் முக்கிய நகரங்களில் ஒன்று சிட்னி. 1788ம் ஆண்டு இந்த நகரத்தின் கவர்னராக இருந்த ஆர்தர் பிலிப் தொடர் குற்றங்களை குறைப்பதற்காக ஒரு புதுவிதமான யுக்தியை கையிலெடுத்தார். 12 பெரிய குற்றவாளிகளை தேர்ந்தெடுத்து அவர்களை வைத்து ஒரு புதிய காவல் படையை உருவாக்கினார். சிட்னி நகரில் நடக்கும் குற்றங்களை அறிந்துகொண்டு குற்றவாளிகளை பிடிப்பதற்காக இந்த 12 பேர் கொண்ட குழுவை ரகசிய காவலர்களாக நியமித்தார்.
குற்றவாளிகளாக இருந்தவர்கள் திருந்துவதற்கு ஒரு மகத்தான வாய்ப்பு கிடைத்தது. குற்றவாளிகளை காவல்துறையில் நியமித்தால் நிலைமை என்னாகும் என்று பலரும் பயந்தனர். கவர்னரின் இந்த முடிவுக்கு எதிரான சில விமர்சனங்களும் எழுந்தது. இருப்பினும் அவரது யுக்தி சரியாக அமைந்தது. குற்றவாளிகளை கொண்டு உருவாக்கப்பட்ட ரகசிய காவல்படை குற்றச்செயல்களில் ஈடுபடும் கும்பலை கைது செய்து கவர்னரின் முன்னே கொண்டு வந்து நிறுத்தியது.
இதன் காரணமாக இந்த ரகசிய காவல்படை திட்டத்தை தொடர எண்ணிய அரசாங்கம் அடுத்த 30 வருடங்களில் கிட்டத்தட்ட 60 நபர்களை ரகசிய காவல் படையில் இணைத்தது. இதில் ஆச்சர்யம் என்னவென்றால் 60 பேருமே குற்றவாளிகளாக இருந்தவர்கள் தான். ஏற்கனவே 12 குற்றவாளிகளை வைத்து உருவாக்கப்பட்ட ரகசிய காவல்படையின் தந்திரத்தால் பல குற்றவாளிகள் பிடிக்கப்பட்டதால் இந்த முறை மேலும் விரிவுபடுத்தப்பட்டது.