பேருந்துகளில் செல்லும் இளம் பிஞ்சுகள் அடிக்கும் லூட்டி நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. ஒரு பேருந்து கூட்டமாக வருகிறது என்றால் அதை விட்டுவிட்டு அடுத்த பேருந்தில் ஏறி பயணிக்கலாம் என்ற எண்ணம் ஒருவருக்கும் வருவதில்லை. எவ்வளவு கூட்டம் இருந்தாலும் அதே பேருந்தில் ஏறி படிக்கட்டுகளில் தொங்கிக்கொண்டு பயணம் செய்வது, பேருந்தின் மேல் ஏறி நடனம் ஆடிக்கொண்டே பயணிப்பது போன்ற ஆ பத்தான சாகசங்களை செய்வது தான் இன்றைய இளைஞர்களுக்கு மிகவும் பிடித்த செயலாக இருக்கிறது.
சமூக வலைத்தளங்கள் மூலம் மாணவர்கள் செய்யும் சேட்டைகளை அனைவரும் கண்காணித்துக்கொண்டு தான் இருக்கின்றனர். அவர்களை கண்டித்து இதுபோன்ற சாகசங்களை செய்ய விடாமல் தடுக்கும் பொறுப்பு பேருந்தில் இருக்கும் ஓட்டுநர் மற்றும் நடத்துனருக்கு தான் அதிகம் உள்ளது என போக்குவரத்துக்கழகம் சார்பில் அறிக்கை ஒன்று வெளியாகியுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளது என்னவென்றால் மாணவர்கள் யாராவது படிக்கட்டுகளில் தொங்கிக்கொண்டு பயணம் செய்வது தெரியவந்தால் அவர்களை எச்சரிக்கை வேண்டும். அப்போதும் அவர்கள் கேட்கவில்லை என்றால் காவல்துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்க வேண்டும் அல்லது காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்புகொண்டு புகார் அளிக்க வேண்டும். பேருந்தில் பயணம் செய்யும் பள்ளி, கல்லூரி மாணவர்கள் ஆ பத்தான முறையில் சாகசம் செய்வதை தடுக்க இது தான் சரியான வழி என்று சொல்லப்பட்டிருக்கிறது.
பள்ளி, கல்லூரி மாணவர்களை கட்டுப்படுத்தும் சிரமமான வேலையை ஏற்கனவே நாங்கள் செய்துகொண்டு தான் இருக்கிறோம். இருப்பினும் எல்லா நேரங்களிலும் அவர்கள் தங்கள் சொல் பேச்சை கேட்பதில்லை என ஒரு சில நடத்துனர்கள் தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.