நம்மில் பலரும் வேலை நிமித்தமாக பல நேரங்களில் வெளியில் உள்ள உணவகங்களை தேடிச்சென்று சாப்பிடுவது வழக்கம். தினமும் இப்படி வெளியே சென்று சாப்பிடுவது ஆரோக்கியத்தை பாதிக்கும் என்பதை என்றாவது யோசித்து பார்த்ததுண்டா ? அடிக்கடி வெளியே சென்று சாப்பிடுவதால் உடல் பருமன் மற்றும் நீரிழிவிற்கு வழிவகுக்கும்.
உயர் தர உணவகங்கள் பல இருந்தாலும் அங்கெல்லாம் அதிக விலை என்று சாதாரண கடைகளில் தான் பெரும்பாலும் அனைவரும் சாப்பிடுவர். அதிலும் ரோட்டோரங்களில் அமைந்துள்ள பாஸ்ட் புட் கடைகளைத்தான் முற்றுகையிட்டு வரிசை கட்டி உண்ண ஆசைப்படுவர். ஆனால் துரித உணவுகள் அதிகமாக உட்கொள்வது செரிமான கோளாறுகளை ஏற்படுத்தும். மேலும் பல இடங்களிலும் சுகாதாரமான உணவுகள் வழங்கப்படுவதில்லை.
கடைகளில் வாங்கி சாப்பிடுவதால் உடலில் கொழுப்பு அதிகமாகிறது. வீட்டில் ஒரு விதமான எண்ணெய் சமையலுக்கு பயன்படுத்துவார்கள். கடையில் என்ன எண்ணெய் உபயோகப்படுத்துகிறார்கள் என்று நமக்கு தெரியாது. ஆனால் கண்டிப்பாக வீட்டில் பயன்படுத்தும் எண்ணெய் மற்றும் கடையில் பயன்படுத்தும் எண்ணெய் இரண்டும் வித்தியாசப்படும். இதனால் அந்த எண்ணெய் நமது உடலுக்கு ஒவ்வாமை அல்லது சருமத்தில் தடிப்புகளை ஏற்படுத்தலாம். வீட்டில் சமைக்கப்படும் உணவு எப்போதுமே நமது உடலுக்கு ஆரோக்கியமானது. எனவே எப்போதும் வீட்டு சாப்பாட்டை சாப்பிட முயலுங்கள். தவிர்க்க முடியாத சூழல்களில் மட்டும் கடையில் சாப்பிடுங்கள்.