உலகம் முழுவதும் கிட்டத்தட்ட 100 நாடுகளில் மொத்தமாக 37,855 கிளைகளை கொண்டுள்ள மிகப்பெரிய நிறுவனம் மெக்டொனால்ட். இது உலகின் மிக நீண்ட தொடர் துரித உணவகமாக விளங்குகிறது. 1940களில் ஆரம்பிக்கப்பட்ட இந்த நிறுவனம் உலகப்புகழ் பெற்று இத்தனை ஆண்டுகளாக வெற்றிநடை போட்டு வருகிறது. மெக்டொனால்ட் நிறுவனத்தின் உணவகங்களில் உலகம் முழுவதும் சராசரியாக ஒரு நாளைக்கு மட்டும் 69 மில்லியன் வாடிக்கையாளர்கள் வந்து செல்கின்றனர்.
அமெரிக்காவின் புளொரிடா மாகாணத்தில் உள்ள இந்த நிறுவனத்தின் கிளை ஒன்றில் அட்டகாசமான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளனர். ஆன்லைன் வர்த்தகத்தை விரிவு படுத்தும் நோக்கத்துடன் ஏகப்பட்ட புதுமையான முயற்சிகளை செய்து வரும் அந்த நிறுவனத்தின் தற்போதைய அறிவிப்பு அனைவரையும் ஆச்சர்யப்படுத்தியுள்ளது. அதாவது தங்களுடைய நிறுவனத்துக்கு நேர்காணலுக்கு வரும் அனைவருக்கும் 50 டாலர்கள் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளனர்.
நேர்காணலுக்கு வருபவர்களுக்கு வேலை கிடைத்தாலும் அல்லது கிடைக்காமல் போனாலும் அந்த ஒரு நாளுக்கான ஊதியமாக அவர்களுக்கு இந்த தொகை வழங்கப்படும் என்று அந்த நிறுவனம் கூறியுள்ளது. டான் நூன் என்பவர் இந்த விளம்பரம் அடங்கிய தகவலை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு ஆண், பெண் யாராக இருந்தாலும் நேர்காணலில் கலந்து கொண்டால் 50 டாலர்கள் கிடைக்கும். எல்லோரும் தவறாமல் கலந்து கொள்ளுங்கள் என்று குறிப்பிட்டுள்ளார். இந்திய மதிப்பில் ஒரு நாள் சம்பளமாக 3700 ரூபாய் வழங்கப்படுகிறது.