notification 20
Daily News
கள்ளக்காதலியுடன் ஊர் சுற்றுவதற்காக கொள்ளையில் ஈடுபட்ட எம்.பி.ஏ. பட்டதாரி! திருட்டு புல்லட்டில் சென்றவரை மடக்கிப்பிடித்த போலீஸ்!

எட்வின் ஜோஸ் என்ற எம்.பி.ஏ. பட்டதாரி நண்பரின் மனைவியுடன் ஜாலியாக ஊர் சுற்றுவதற்காக திருட்டு வேலையில் ஈடுபட்டு தன்னுடைய வாழ்க்கையை வீணடித்துக்கொண்டுள்ளார். இவர் கடந்த சில மாதங்களாக கன்னியாகுமாரி மாவட்டம் முழுவதும் ஏகப்பட்ட வீடுகளில் வரிசையாக கொள்ளையடித்து வந்துள்ளார். கள்ளக்காதலியுடன் உல்லாசமாக இருக்க வேண்டும் என்பதற்காக மாஸ்டர்பிளான் போட்டு கொள்ளையடித்தவர் தற்போது வகையாக போலீசாரிடம் சிக்கிக்கொண்டார்.

பட்டப்படிப்பு வரை படித்திருந்தாலும் அவருக்கு திருட்டுத்தொழில் மீது தான் ஆர்வம் இருந்துள்ளது. தன்னுடைய இளம் வயதிலேயே தந்தையை பறிகொடுத்ததால் அவ்வப்போது சிறிய திருட்டுகளை செய்து வந்த எட்வின் தற்போது பெரிய கொள்ளைக்காரனாக மாறிவிட்டார். எம்.பி.ஏ.படிப்பை முடித்த பிறகு வழக்கறிஞர் ஆக வேண்டும் என்ற ஆசையில் கேரளாவில் உள்ள சட்டக்கல்லூரியில் சேர்ந்து படிக்க ஆரம்பித்தார்.

முப்பது வயதாகும் எட்வின் ஜோஸ் சட்டக்கல்லூரியில் படித்துக்கொண்டே கிடைக்கும் நேரங்களில் கட்டுமான வேலைக்கும் சென்றுள்ளார். அங்கு ஆரம்பித்தது அவருக்கான பிரச்சனை. வேலை செய்யும் இடத்தில் ஒரு பெண்ணுடன் அவருக்கு தொடர்பு ஏற்பட்டுள்ளது. அந்தப்பெண் எட்வினுடன் வேலை பார்த்துவரும் ஒரு தொழிலாளியின் மனைவி. இன்னொருவர் மனைவியுடன் ஏற்பட்ட கள்ளத்தொடர்பு அவருக்கு ஏகப்பட்ட சிக்கலை கொண்டு வந்தது.

கள்ளக்காதலியுடன் நெருங்கி பழகிய எட்வின் அடிக்கடி அந்தப்பெண்ணை அழைத்துக்கொண்டு சுற்றுலா செல்வதை வாடிக்கையாக வைத்திருந்திருக்கிறார். கள்ளக்காதலியுடன் உல்லாசமாக ஊர் சுற்றுவதற்கு தேவையான பணத்தை கொள்ளையடித்து சம்பாதித்துள்ளார் எட்வின். ஒரு கட்டத்தில் வாரம் ஒரு கொள்ளை சம்பவத்தை அரங்கேற்றி மாதத்திற்கு ஒரு உல்லாச பயணம் போகலாம் என்று முடிவெடுத்து வரிசையாக கொள்ளைகளை செய்து வந்த எட்வின் இதற்காக ஒரு வீட்டில் இருந்து புல்லட் பைக்கை திருடி அதைவைத்து வீடுகளில் புகுந்து நகைகளை திருட ஆரம்பித்துள்ளார்.

திருட்டு புல்லட்டில் ஜாலியாக சென்று கொண்டிருந்த போது எதேச்சையாக போலீசிடம் சிக்கிய அவர் ஏடாகூடமாக பேசியதால் அவர் மீது போலீசுக்கு சந்தேகம் எழுந்துள்ளது. காவல் நிலையத்துக்கு அழைத்துச்சென்று விசாரித்தபோது தான் கன்னியாகுமரி பகுதியில் அவர் தொடர் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது தெரிய வந்தது. அவரிடம் இருந்து 32 சவரன் நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தகவல் தெரிவித்தனர்.

Share This Story

Written by

Gowtham View All Posts