நமக்கு தீங்கு விளைவிக்காத எந்த உயிரினமாக இருந்தாலும் அது சூழலலின் நன்மைக்கே! உயிரினங்கள் உணவு சங்கிலியில் ஒன்றையொன்று சார்ந்து உள்ளது. அந்தவகையில் பல்லிகள் வீட்டில் இருக்கும் சின்ன சின்ன பூச்சிகளை உணவாக உண்பதால் வீடு சுத்தமாக இருக்கும்.
இருப்பினும் சிலருக்கு பல்லிகள் வீட்டிற்குள் இருப்பது அருவருப்பாக இருக்கும். அதன் எச்சம் வீட்டு சுவர்களில் ஒட்டிக்கொள்வதால் சிலருக்கு அது பிடிக்காது. இதனால் பல்லியை வீட்டிலிருந்து விரட்ட, இணையத்தில் கொட்டி கிடக்கும் பல யுக்திகளை பயன்படுத்தி தோல்வி அடைந்திருப்பார்கள். எப்படி யூடியூபில் பார்த்து சமைத்த உணவை வாயில் வைக்க முடியாதோ, அப்படித்தான் இணையத்தில் கொட்டி கிடக்கும் தகவல்களை பயன்படுத்திய பின்னர் ஏமாற்றம் தான் மிச்சம்.
ஆனால் உபயோகமுள்ள சில முறைகளை பயன்படுத்தி பலனடைந்தவர்களின் குறிப்புகள் சில, பல்லிகள் குறிப்பிட்ட வாடைகளை வெறுக்கின்றன. உதாரணத்திற்கு மயிலிறகின் வாடை. பல்லிகள் உள்ள இடத்தில் ஆங்காங்கே மயிலிறகை வைத்தால் பல்லிகள் வராது. முட்டை ஓடு வைத்தாலும் வராது.
பல்லிகள் கூட நமக்கு எந்த இடையூறையும் ஏற்படுத்தாது. ஆனால் எலிகள் வீட்டில் உள்ளவர்களுக்கு பெரும் ம ன உளைச்சலை ஏற்படுத்திவிடும். பீரோவிற்குள் உள்ள புதிய துணிகளை கரித்துணிக்கு கூட பயன்படுத்த முடியாத வகையில் செய்வது, ஷோபாவிற்குள் ஓட்டை போட்டு அதற்குள் குடும்பம் நடத்துவது அப்பப்பா! எலிகளின் அழிச்சாட்டியங்களை ஒரு நாள் முழுக்க சொல்லிக்கொண்டே போகலாம்.
காப்பித்தூள், மிளகு, புதினா, வெங்காயம், பூண்டு இவற்றில் ஏதேனும் ஒன்றை பொடி செய்து பல்லி அல்லது எலிகள் நடமாடும் பகுதியில் தூவி விட்டால் நாளடைவில் பல்லி, எலி இவை வீட்டை விட்டு வெளியேறும். மேலும் ஏதாவது பழைய துணியை பினாயிலில் நனைத்து எலிகள் உலாவும் இடங்களில் வைத்தால் எலிகள் நடமாட்டம் இருக்கவே இருக்காது என்பது பயனளித்த செய்முறை.
மேற்கூறிய முறைகள் அனைத்துமே பலனளிக்க கூடியவை என்பது பயனடைந்தவர்களின் கருத்து.