என் திருமணம் சிம்பிளா முருகன் கோவிலில் நடந்தது. மணப்பெண் சடங்கு மணப்பெண் வீட்டில் எளிதாக முடிந்தது. உணவு விருந்து ஹோட்டலில் இனிதாக முடிந்தது. மண்டபம் அவசியமே இல்லை. எல்லோரும் இதே மாதிரி செய்யணும் என்றில்லை. ஒரு சிலவற்றை உன்னிப்பாக பார்த்து செய்தால், திருமணத்தில் செலவாகும் கணிசமான தொகையை மிச்சப்படுத்தலாம். நாம் சிக்கனமாக செய்ய வேண்டும் என்றாலும், அந்தந்த துறைகளில் உள்ளவர்கள் விடுவதில்லை.
ஐயர் இருபதாயிரம் ரூபாய் கேட்கிறார். சமையல்காரர் குறைந்த பலகாரம் போட சம்மதிப்பது இல்லை. மேடை அலங்காரம் முப்பதாயிரம் தாண்டித்தான் கேட்கிறார்கள். குறைந்த பட்சம் அலங்காரம் செய்ய அவர்கள் விடுவதில்லை. வீடியோவும் அப்படியே. இதில் இறுக்கிப்பிடித்தாலே பாதிக்கு பாதி செலவு குறைந்துவிடும். வசதி இருக்கு என்பதாலேயே ஆடம்பரமாக நடத்தி, அடுத்த தலைமுறையில் முகவரியைத் தொலைத்து, மானமிழந்து குறுக்கு வழியில் பயணிக்கும் பல குடும்பங்களை நானும் பார்த்துக்கொண்டிருக்கிறேன்.
ஜெனரேட்டர், சமையல் செட், தங்கும் வசதி உள்ள மண்டபமாக பார்த்து தேர்வு செய்தால், சில்லறை செலவு ஆகாது. அதில் 30 ஆயிரத்திற்கும் மேல் மிச்சப்படுத்தலாம். பிறகு மேளம், தாளம் வகையில் அதிக செலவு செய்யத்தேவையில்லை. அதற்கே 30 ஆயிரம் வரை ஆகும். சிம்பிளா சத்தம் கேட்டால் போதும். அதற்காக பெரிய தொகை செலவிட வேண்டியதில்லை. ஐயர் என்று வரும்போது, வயதான, நேர்மையான ஆட்களாக பார்த்து அழைக்கலாம் பணமும் நியாயமா வாங்குவாங்க. என்ன சிக்கல் நடந்தாலும் பொறுமையா கையாளுவாங்க.
மேடை அலங்காரத்தை பொறுத்த வரையில், பழைய நபர்களை விட்டுவிட்டு புதிதாக தொழில் செய்பவர்களை தேர்ந்தெடுங்கள். அதில் பாதிக்கு பாதி மிச்சமாகும். ஐம்பதாயிரம் செலவாகும் இடத்தில், 20 ஆயிரம் இருந்தால் போதும். அவங்க செய்யும் வேலையும் பளிச்சென்று இருக்கும். போட்டோ மற்றும் வீடியோ என்றால் நான்கு தெரிந்தவர்களுக்கு வாய்ப்பு கொடுக்கலாம். சமையலை பொறுத்தவரையில் மொத்தமா பொருள் வாங்கிக்கொடுத்து, அனுபவமுள்ள சமையல்காரரை வைத்து முடிக்கலாம். இதெல்லாம் செய்தால் குறைந்தது ஒரு லட்சமாவது மிச்சமாகும்.