சோஷியல் மீடியா பிரபலம் ரவுடி பேபி சூர்யா என்ற சுப்புலட்சுமி மற்றும் அவரது நண்பர் சிக்கந்தர் ஆகியோரை குண்டர் சட்டத்தின் கீழ் காவலில் வைக்க கோவை மாநகர காவல் ஆணையர் பிறப்பித்த காவல் உத்தரவை ரத்து செய்ய சென்னை உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது. நீதிபதி பிரகாஷ் மற்றும் டீக்கா ராமன் ஆகியோர் அடங்கிய அமர்வு, சூர்யாவின் சோஷியல் மீடியா வீடியோக்களையும், அவரது பதிவுகளையும் பார்த்த பின்னர் வழக்கை ஒத்திவைத்தனர்.
வீடியோவை பார்த்த பிறகு கருத்து தெரிவித்த அவர்கள், குற்றம் சாட்டப்பட்டவர்கள் வெளியிட்ட வீடியோக்கள் அதிர்ச்சியூட்டுவதாக தெரிகிறது. அவர்கள் மீது கோவை போலீசார் எடுத்த நடவடிக்கை சரியானது தான் என்றனர். தற்போது எந்த உத்தரவையும் பிறப்பிக்க முடியாது என்று கூறி வழக்கை 6 வாரங்களுக்கு ஒத்திவைத்தனர்.
கடந்த பிப்ரவரியில், மற்றொரு பெண் யூடியூபரை மிரட்டும் வகையில் திட்டி வீடியோ வெளியிட்டதற்காக சூர்யா கைது செய்யப்பட்டார். பின்னர் குண்டர் சட்டத்தின் கீழ் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டார். எனவே, குண்டர் சட்டத்தின் கீழ் தங்கள் காவலை ரத்து செய்யக் கோரி சூர்யாவும், அவரது நண்பரும் உயர் நீதிமன்றத்தை அணுகி இருந்தனர்.