முன்பெல்லாம் பொண் குழந்தையை பெற்றவங்க எப்படி கட்டிக்கொடுப்பதோன்னு புலம்புவாங்க. இன்னைக்கு ஆண் குழந்தைகளை பெற்றெடுத்தவர்கள் கல்யாணம் பண்ணிக்கொடுக்க முடியாம தவித்துக்கொண்டிருக்கின்றனர். காலம் மாறிப்போச்சு. பொண்ணுகளுக்கு இப்போ ஏகப்பட்ட டிமாண்ட். கட்டின புடைவையோடு வந்தாலும், கல்யாணம் பண்ணிக்க ரெடியா இருக்காங்க. அந்தக்காலம் மாதிரி, நூறு பவுன், இரு நூறு பவுன் கேட்டு கொடுமைப்படுத்துவதெல்லாம் கிடையாது. அதே மாதிரி இன்றைய பெண்களும், கட்டின புருஷனே கண் கண்ட தெய்வம் என்கிற கோட்பாட்டை எல்லாம் நம்புவதில்லை. பிடிக்கலைன்னா தூக்கி எறிஞ்சுட்டு போயிட்டே இருப்பாங்க.
இந்த சுதந்திரத்தை நல்ல படியா பயன்படுத்துறவங்களும் இருக்காங்க. இதான் சாக்குன்னு சொல்லி, கொள்ளை அடிப்பவர்களும் இருக்காங்க. இப்போது பெண்வீட்டார் சிலர் பெண்ணுக்கு வரதட்சனை கேட்பதும் நடக்கிறது. எனக்கு தெரிந்த குடும்பத்தில் இரண்டு பெண் குழந்தைகள் இருக்காங்க. அதில் மூத்த மகளை திருமணம் முடிக்க நிறையப்பேர் பெண் கேட்டு வராங்க. அதற்கு பெண்ணின் தாய், எனக்கு பணம் கொடுத்துவிட்டு எனது பெண்ணைக்கட்டிக் கொள்ளுங்கள் என்று கூறி மறுத்து விட்டார். விரும்பி பெண் கேட்க வரும் எல்லோருக்குமே இதே நிலைமை தான்.
இதே போல இன்னொரு இடத்தில், படிப்பு இல்லாத தங்களுடைய மகனுக்கு பெண் தேடிக்கொண்டிருந்தனர். இல்லாத இடத்தில் பெண் எடுக்கலாம் எனக்கேட்டதற்கு, பெண்ணைத் தரவேண்டுமானால் நாங்கள் குடியிருக்க ஒரு வீடும், கையில் சில லட்சங்கள் தரவேண்டுமெனக் கேட்டுள்ளனர். நாமே வலியச்சென்று விரும்பிக் கேட்கும்போது சில இடங்களில் இதுபோல் நடக்கிறது. பெண் வீட்டில் இப்படி கேட்கிறாங்கன்னு யாரும் வெளியில் சொல்வதும் இல்லை. தெரியாமல் உளறினால், அடுத்து எங்கு திருமணம் செய்தாலும், பெண்ணுக்கு காசு கொடுத்து கட்டிக்கிட்டு வந்துருக்காங்கன்னு ஊரு உலகம் பேசும்.
பெண் பிள்ளையைப் பெற்ற சிலரது மனநிலை இவ்வாறுதான் மாறிக்கொண்டிருக்கிறது. இஸ்லாமியர்கள் தான் பெண்ணுக்கு பணமோ, நகையோ கொடுத்து அவரை மணமுடிப்பதாக கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால், அந்த பணமோ, நகையோ அந்த பெண்ணை சார்ந்ததுதான். அதனை அவர் விருப்பப்படி செலவு செய்வாராம். அதில் அவரது பெற்றோருக்கோ, கொடுத்த கணவருக்கோ எந்த உரிமையும் இல்லை எனக் கேள்விப்பட்டிருக்கிறேன். அந்த மாதிரி ஒரு மாற்றம் வருவது போலத்தெரிகிறது. நீங்க என்ன நினைக்கிறீங்க?