வடமாநிலத் தொழிலாளர்களை அடிப்படையாக வைத்து பதிவேற்றிய காணொளிக்காக “பரிதாபங்கள்” புகழ் கோபி மற்றும் சுதாகர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. "வடக்கு ரயில் பரிதபங்கள்" என்ற தலைப்பில் ஒரு வீடியோவில் இருவரும் சேர்ந்து வடமாநில தொழிலாளர்களை கேலி செய்திருந்தனர். அந்த வீடியோவை வைத்தே பெரும்பாலான வெறுப்பு வீடியோக்கள் உருவாக்கப்பட்டு சோஷியல் மீடியாவில் பகிரப்பட்டன.
அவர்களுடைய வீடியோவில் உள்ளூர் தொழிலாளர்களுடன் ஒப்பிடும்போது, வடமாநில தொழிலாளர்கள் குறைந்த ஊதியம் பெறுவதைப் பற்றி நகைச்சுவையாகக் கூறியுள்ளனர். இப்போது, சென்னைக்கான கட்டுமானத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் சீனிவாசன் என்பவர் அவர்கள் மீது சட்டப்பூர்வ நடவடிக்கையைத் தொடங்கியுள்ளார்.
13 நிமிட வீடியோவில், கோபியும் சுதாகரும் வட இந்தியர்களை, குறிப்பாக இந்தியை மொழியாகக் கொண்டவர்களை, ரயில் பெட்டிகளில் அவர்கள் நடந்துகொள்ளும் விதத்தை கேலி செய்து காட்டினர். கட்டிடம் கட்டுவதற்கு உள்ளூர் மக்களை விட வட இந்தியர்கள் எப்படி குறைந்த தொகைக்கு வேலை செய்ய தயாராக இருக்கிறார்கள் என்பதையும் அவர்கள் காட்டினார்கள்.
இதற்கு கண்டனம் தெரிவித்த சீனிவாசன், 4.5 மில்லியனுக்கும் அதிகமான சந்தாதாரர்களைக் கொண்ட கோபி மற்றும் சுதாகரின் யூடியூப் சேனலைத் தடை செய்ய வேண்டும் என்று கோரினார். வட இந்தியர்கள் 500 ரூபாய்க்குக் கூட முழுக் குடும்பத்தோடும் வேலை செய்யத் தயாராக இருப்பதாகச் சித்தரிப்பது தவறு. அவர்கள் வட இந்திய தொழிலாளர்களை இழிவுபடுத்துகிறார்கள் என்று ஊடகங்களிடம் கூறினார்.