கோயம்புத்தூர் சாலையில் பேருந்தின் பின்புறத்தில் இருக்கும் கம்பியை பிடித்துக்கொண்டு ஒருவர் பயணம் செய்துள்ள சம்பவம் உள்ளூர் மக்கள் பலரை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. ஆயுத பூஜை, விஜய தசமி, பள்ளிகளில் காலாண்டு தேர்வு விடுமுறை ஆகியவை அடுத்தடுத்து வந்த காரணத்தினால் கடந்த சில நாட்களாக பேருந்து, ரயில், விமானம் என அனைத்திலும் மக்கள் கூட்டம் நிரம்பி வழிவதை காண முடிகிறது.
தமிழ்நாட்டின் மிகப்பிரபலமான சுற்றுலாத்தலமாக விளங்கும் உதகமண்டலத்துக்கு வெளிநாட்டை சேர்ந்தவர்கள் கூட அதிக அளவில் வந்து செல்கின்றனர். ஊட்டிக்கு வர நினைக்கும் வெளிநாட்டினர் பலரும் கோவை விமான நிலையத்தை வந்தடைந்து அங்கிருந்து எளிதாக ஊட்டியை சென்றடைகின்றனர்.
கோவையில் இருந்து அவிநாசி செல்லும் சாலையில் வெளிநாட்டு சுற்றுலாப்பயணி ஒருவர் வித்தியாசமான முறையில் ஸ்கேட்டிங் செய்து காண்போர் அனைவரையும் வாய் பிளக்க வைத்துள்ளார். அரசு பேருந்தின் பின்கம்பியை கைகளால் பிடித்துக்கொண்டு கிட்டத்தட்ட மூன்று கிலோமீட்டர் தூரம் அவர் ஆ பத்தான முறையில் ஸ்கேட்டிங் செய்துள்ளார். இதுகுறித்த புகைப்படம் மற்றும் வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. போக்குவரத்து நெரிசல் மிக்க சாலையில் இவர் அசால்ட்டாக பேருந்தை பிடித்துக்கொண்டு ஸ்கேட்டிங் செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.