தமிழகத்தில் நடப்பாண்டில் அரசின் வருமானம் பல மடங்கு அதிகரித்து வருவதாக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார். பொது வினியோகத்துக்கான செலவு, நகர பேருந்துகளில் மகளிருக்கு இலவச பயணம், பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறைப்பு, கொரோனா பேரிடர் நெருக்கடி உள்ளிட்ட பல்வேறு செலவுகளுக்கு இடையிலும் நிதி பற்றாக்குறையை தமிழக அரசு வெகுவாக குறைத்துள்ளதாக அவர் கூறியிருக்கிறார்.
பள்ளிக்குழந்தைகளுக்கு காலை உணவு, மாணவிகளுக்கு ஊக்கத்தொகை, ஆவின் பால் விலை குறைப்பு, உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டம் என்று வரிசையாக ஏகப்பட்ட தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றி வரும் திமுக அரசு வருமானத்தை அதிகரிப்பதிலும் கவனம் செலுத்தி வருவதால் அரசுக்கு இருக்கும் கடன் மற்றும் வட்டி இரண்டுமே குறைந்து வருவதாகவும் அமைச்சர் கூறியுள்ளார்.
வரி மூலம் கிடைக்கும் வருமானம், மற்ற வழிகளில் கிடைக்கும் வருமானம் என இரண்டுமே உயர்ந்துள்ளதாக தெரிவித்த அமைச்சர் கடந்த ஒரு வருடத்தில் 1000 கோடி ரூபாய்க்கு மேல் வட்டியை குறைத்திருப்பதாக தெரிவித்துள்ளார். மத்திய அரசிடம் இருந்து வந்துள்ள கடிதத்தில் தமிழக அரசு 2022-2023ம் ஆண்டில் அதிகபட்சமாக 83,955 கோடி ரூபாய் தான் கடன் பெற வேண்டும். அதற்கு மேல் கடன் வாங்கக்கூடாது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மாநில அரசு எவ்வளவு கடன் வாங்க வேண்டும் என்பதை இவர்களே நிர்ணயம் செய்வதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்? நாம் எவ்வளவு கடன் பெற வேண்டும் என்பதை நாம் தான் நிர்ணயிக்க வேண்டும். நம்முடைய உரிமையில் மத்திய அரசு தலையிடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. தேவையில்லாத செலவுகளை குறைக்கும் பணிகளில் அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளதால் தான் கடனை குறைத்து வருமானத்தை அதிகரித்திருக்கிறோம் என்று அமைச்சர் தெரிவித்தார்.