கீரை வகைகள் குறித்து ஓரளவுக்கு தெரிந்து வைத்திருப்பவர்களுக்கு மட்டுமே இந்த செய்தி நன்றாக புரியும். ஏனெனில் இந்தக்காலத்தில் கீரைகளை சாப்பிடும் நபர்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துவிட்டது. இருப்பினும் கீரைகளை வைத்து சாதனை செய்யும் அளவுக்கு ஒரு கூட்டத்தினர் இன்னமும் நம் ஊருக்குள் இருக்கின்றனர் என்பது சற்றே ஆச்சர்யத்தை வரவழைக்கிறது.
புளித்த கீரை என்பது கீரை வகைகளில் முக்கியமான ஒன்றாகும். உடலுக்கு குளிர்ச்சி அளிக்கக்கூடிய இந்தக்கீரையை பக்குவமாக கடைந்து சாதத்தில் போட்டு சாப்பிடும்போது அதன் ருசி வேற லெவலில் இருக்கும். பெரிது பெரிதான தண்டுகளுடன் வளரக்கூடியது புளித்த கீரை. இதை சமைக்கும்போது கீரையை பறித்துவிட்டு தண்டுகளை தூக்கி எறிந்துவிடுவார்கள். அப்படி தூக்கி எறியப்படும் புளித்த கீரை தண்டுகளை உபயோகமாக பயன்படுத்தினால் என்ன என்று யோசித்த சில மாணவர்கள் அதை வைத்து பெண்கள் பயன்படுத்தும் சானிட்டரி நாப்கின்களை தயாரித்து அசத்தியுள்ளனர்.
கோவை மாவட்டத்தை சேர்ந்த நிவேதா மற்றும் கெளதம் இருவரும் பேஷன் டெக்னாலஜி படித்து வருகின்றனர். புளித்த கீரையை வைத்து ஆடை தயாரிக்க முடிவு செய்து அதற்கான பணிகளை மேற்கொண்டனர். வேலைகள் முடிந்து ஆடை கைக்கு வந்தபிறகு அதை பரிசோதித்து பார்த்தபோது அவர்களே வியக்கும் அளவுக்கு பல அரிய தகவல்கள் தெரிய வந்தது. புளித்த கீரை தண்டுகளில் இருந்து தயாரிக்கும் ஆடைகள் அதிக அளவில் உறிஞ்சும் திறனையும், நுண்ணுயிர்களை அழிக்கும் திறனையும் கொண்டுள்ளது என்பதை கண்டறிந்தனர். இதன் பிறகு தான் புளித்த கீரை தண்டுகளை வைத்து சானிட்டரி நாப்கின்களை தயாரிக்கும் ஐடியா அவர்களுக்கு வந்தது. தங்கள் மனதில் உதித்த மகத்தான யோசனையை வைத்து நாப்கின்களை உருவாக்கி அனைவரையும் பிரம்மிக்க வைத்துள்ளார்கள் நிவேதா மற்றும் கெளதம்.
பெண்கள் பயன்படுத்தும் நாப்கின்களில் அதிக அளவில் பிளாஸ்டிக் கலந்திருப்பதால் அவை மட்கி அழிவதற்கு பல நூற்றாண்டுகள் ஆகும். ஆனால் புளித்த கீரை தண்டுகளை வைத்து இவர்கள் உருவாக்கியுள்ள நாப்கின்கள் வெறும் 4 மாதத்தில் மட்கிவிடுமாம். சுற்றுச்சூழலை மாசுபடுத்தாமல் இருக்கக்கூடிய நாப்கின்களை தயாரித்துள்ள நிவேதா மற்றும் கௌதமுக்கு பல்வேறு விருதுகள் கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.