நாம் வாங்கும் பொருட்களில் காலாவதி தேதி அச்சிடப்பட்டுள்ளதா இல்லையா என்று சோதனை செய்து பார்த்த பிறகே வாங்கி வருகிறோம். ஒரு உணவுப்பொருளோ அல்லது மருந்தோ காலாவதி ஆனபிறகு உட்கொண்டோமானால் அது நமது உயிருக்கே ஆபத்தாக முடிந்து விடும். இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த காலாவதி தேதி அச்சிடப்படும் முறை எப்படி உருவானது என்பதை பற்றி இங்கே பார்க்கலாம்.
கடைகளில் விற்கப்படும் பொருட்களில் காலாவதி தேதி அச்சிடப்படுவதற்கு காரணமானவர் கெபோன் என்பவர் தான். இவர் ஒன்றும் சாதாரண ஆள் கிடையாது. அதே சமயம் நீங்கள் நினைப்பது போல இவர் ஒரு விஞ்ஞானியோ ஆராய்ச்சியாளரோ அல்லது நோபல் பரிசு வாங்கிய மேதையோ கிடையாது. ஒரு காலத்தில் அமெரிக்காவின் நம்பர் 1 குற்றவாளி என அறிவிக்கப்பட்டவர் தான் கெபோன். இவர் மது கடத்தல் போன்ற பல குற்றங்களை செய்து வந்திருக்கிறார். அவர் செய்த நல்ல காரியம் என்னவென்றால் இந்த காலாவதி என்ற விஷயம் உருவாக காரணமாக இருந்தது தான்.
1930ம் ஆண்டு காலகட்டத்தில் தான் இந்த சம்பவம் நடந்துள்ளது. கெபோன் ஒரு சமயம் பால் வியாபாரத்தை தொடங்கி நடத்தி வந்தார். அவரிடம் பால் வாங்கி பருகிவந்த அவரது உறவினர் ஒருவர் திடீரெனெ ஒருநாள் உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவனையில் சேர்ந்தார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் கெட்டுப்போன பாலை குடித்ததன் விளைவாக உடல்நலம் பாதிக்கப்பட்டதாக தெரிவித்தனர்.
இதனால் பால் எத்தனை நாட்கள் கெட்டுப்போகாமல் இருக்கும் என்பதை தெரிந்து கொள்வதற்காக பால் பாக்கெட்டுகளில் காலாவதி தேதியை அச்சிடும் நடைமுறையை முதன் முதலாக அறிமுகப்படுத்தினார் கெபோன். இதற்காக அரசாங்கத்துக்கு இவர் லஞ்சம் தர வேண்டியிருந்தது. இதன் பின்னரே உலகம் முழுவதும் காலாவதி தேதி அச்சிடும் முறை பரவலாகி இன்று நாம் வாங்கும் ஒவ்வொரு பொருளிலும் காலாவதி தேதி அச்சிடப்படுகிறது.