அன்லிமிடெட் மீல்ஸ் அல்லது முழு சாப்பாடு சாப்பிட வேண்டுமென்றால் குறைந்தபட்சம் 100 ரூபாயாவது காசு வேண்டும். அப்படி இருக்கறப்ப வெறும் 1 ரூபாய்க்கு எப்படி அதை கொடுக்க முடியும்? மனமிருந்தால் குடுக்கலாம் என்பதற்கு வெங்கட்ராமன் போன்ற மனிதர்கள் தான் உதாரணம். இவர் ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அருகில் ஹோட்டல் கடை ஒன்றை நடத்தி வருகிறார். இவர் கடையில் ஒரு முழு சாப்பாட்டின் விலை 70 ரூபாய். ஆனால் அந்த சாப்பாட்டை அவர் வெறும் 1 ரூபாய்க்கு கொடுத்து வருகிறார்.
மருத்துவமனையில் சிகிச்சை பெரும் நோயாளிகளுக்கு அரசு சார்பில் சாப்பாடு கொடுக்கப்படுகிறது. ஆனால் அவர்களை பார்த்துக்கொள்ள கூட தங்கியிருக்கும் நபர்கள் வெளியில் தான் சாப்பிட்டாக வேண்டும். ஏழை எளியவர்கள் தனியார் மருத்துவமனையில் வைத்தியம் பார்க்க காசில்லை என்ற காரணத்தால் தான் அரசு மருத்துவமனைக்கு வருகின்றனர். அப்படி இருக்கும் போது அவர்களால் தினமும் 70 அல்லது 80 ரூபாய் கொடுத்து சாப்பிட முடியுமா? அப்படிப்பட்டவர்கள் பசியாறுவதற்காகத்தான் 1 ரூபாய்க்கு உணவு வழங்கும் சலுகையை கொண்டு வந்துள்ளார் வெங்கட்ராமன்.
இவர் தன்னுடைய ஹோட்டலில் இருந்து தினமும் 20 பேருக்கு காலை, மதியம், இரவு என மூன்று வேளைக்கும் உணவு வழங்கி வருகிறார். உணவுக்காக அவர் வசூலிப்பது 1 ரூபாய் மட்டும்தான். ஆனால் 70, 80 ரூபாய் மதிப்புள்ள அதே சாப்பாட்டின் தரத்தோடு இவர் உணவு கொடுக்கிறார். இப்படிப்பட்ட மனிதர்கள் இன்னமும் ஊருக்குள்ள இருக்காங்க என்பதை கேள்விப்படும் போது மனது நிறைவாக இருக்கிறது. இவருடைய நல்ல மனதை தெரிந்துகொண்டு பலரும் இவருக்கு நன்கொடை வழங்கி வருகின்றனர். உணவு தவிர்த்து ஏழைகளுக்கு கம்பளி உள்ளிட்டவற்றையும் வழங்கி வரும் வெங்கட்ராமன் தன் கடைக்கு சாப்பிட வரும் மாற்றுத்திறனாளிகளுக்கும் சலுகை விலையில் உணவளித்து மகிழ்கிறார்.