தமிழ்நாட்டை ஆளும் திராவிட முன்னேற்றக் கழகம் 2021-22 நிதியாண்டில் ரூ. 308 கோடிக்கு மேல் நன்கொடையாகப் பெற்றுள்ளது, இதில் தேர்தல் பத்திரங்கள் மூலம் ரூ. 306 கோடியும் அடங்கும் என்று தேர்தல் ஆணையத்தில் சமீபத்திய தாக்கல் செய்த அறிக்கையில் தெரிவிக்கிறது. 2021-22 ஆம் ஆண்டிற்கான கட்சிகளின் வருமானத்தை தேர்தல் ஆணையம் பொதுமக்கள் பார்க்கும் வகையில் வெளியிட்டது.
கார்ப்பரேட் நிறுவனங்கள் வாங்கிய தேர்தல் பத்திரங்கள் மூலம் திமுகவுக்கு ரூ.306 கோடி கிடைத்துள்ளது. கார்ப்பரேட் துறையிடம் இருந்து மேலும் ரூ.60 லட்சம் நன்கொடையாக கிடைத்தது. கார்ப்பரேட் அல்லாத நன்கொடையாளர்களிடமிருந்து கட்சி கிட்டத்தட்ட ரூ.1.55 கோடி பெற்றது. தொண்டர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகளிடம் இருந்து நன்கொடைகள் மூலம் கிட்டத்தட்ட ரூ.5.84 லட்சம் பெறப்பட்டதாக கூறியது.
ரூ.2,000க்கும் குறைவான தொண்டர்கள் கொடுத்த நிதியும் இதில் அடங்கும். கடந்த நிதியாண்டில் பல தி.மு.க நாடாளுமன்ற உறுப்பினர்களும் கட்சிக்கு நன்கொடை கொடுத்துள்ளனர். இது தவிர ஒவ்வொரு தொகுதி எம்எல்ஏக்களும் கட்சிக்கு என ஒரு பங்கு தொகையை அனுப்புகின்றனர். அதெல்லாம் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படவில்லை. அதையும் சேர்த்தால், தொகை இன்னும் கூடுதலாக வரும் என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள்.