வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கொரோனா தடுப்பூசி சான்றிதழ் குறித்து வெளியிட்டுள்ள செய்தி ஒன்று சமூக வலைத்தளங்களில் பேசுபொருளாக மாறியுள்ளது. நம் நாட்டில் டிஜிட்டல் வடிவில் கொடுக்கப்படும் கொரோனா தடுப்பூசி சான்றிதழை நாம் நம்முடைய கைபேசியில் வைத்துக்கொண்டு எங்கு வேண்டுமானாலும் பயணம் செய்யலாம்.
டிஜிட்டல் தடுப்பூசி சான்றிதழ் வைத்துக்கொண்டு அமெரிக்காவில் உள்ள ஒரு ஹோட்டலுக்கு சென்றபோது அவருக்கு ஏற்பட்ட வினோதமான அனுபவத்தை பகிர்ந்துள்ளார் அமைச்சர் ஜெய்சங்கர். அவருடைய மகன் அமெரிக்காவில் வசித்து வருகிறாராம். அவரை சந்திக்க கடந்த வருடம் அமெரிக்கா சென்ற அமைச்சர் ஜெய்சங்கர் மகனுடன் ஒரு உணவகத்துக்கு சென்றுள்ளார்.
உணவக வாசலில் இருந்தவர்கள் இவர்கள் இருவரிடமும் கொரோனா தடுப்பூசி சான்றிதழை காண்பிக்குமாறு கேட்டுள்ளனர். அமைச்சர் ஜெய்சங்கர் தன்னுடைய போனில் சேமித்து வைத்திருந்த டிஜிட்டல் தடுப்பூசி சான்றிதழை எடுத்து காண்பித்துள்ளார். ஆனால் அவரது மகன் தன்னுடைய பர்ஸுக்குள் இருந்து சீட்டு ஒன்றை எடுத்து அதை காண்பித்துள்ளார். கடைசியில் அது தான் கொரோனா தடுப்பூசி சான்றிதழ் என தெரிய வந்துள்ளது.
மகனின் தடுப்பூசி சான்றிதழை பார்த்துவிட்டு தனக்கு சிரிப்பு வந்ததாக கூறியுள்ளார் அமைச்சர் ஜெய்சங்கர். இந்தியாவில் டிஜிட்டல் தடுப்பூசி சான்றிதழ் கொடுக்கப்படுகிறது. நீங்க இன்னும் காகித சான்றிதழ் கொடுத்துக்கொண்டு இருக்குறீங்களா என்று நகைச்சுவையாக மகனை கலாய்த்துள்ளார் ஜெய்சங்கர். இந்த செய்திக்குறிப்பு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.