எனக்கு சீம்பால் கட்டி என்றால் ரொம்ப பிடிக்கும். மாடு கன்று போட்ட பிறகு, கறக்கப்படும் முதல் பாலை, கன்றுக்கு கொடுத்த பிறகு, சொந்த பயன்பாட்டுக்கு எடுத்துக்கொள்வார்கள். அதனுள் ஏலக்காய், முந்திரி, மிளகு பொடி சேர்த்து, சர்க்கரை கலந்து வேக வைத்து சாப்பிட்டால் அமிர்தம் மாதிரி இருக்கும். ஒரு குண்டா சீம்பால்கட்டி என்றாலும், நானே சாப்பிட்டு முடித்துவிடுவேன். அப்போது தான் அப்பா சொல்வார், "எதையுமே அளவுக்கு அதிகமா எடுத்துக்க கூடாது, பின்னாடி பிரச்சனை வரும்" என்று எச்சரித்துவிட்டு சென்றார்.
சீம்பால் சாப்பிட்ட பிறகு, பால் வாடை வரக்கூடாதென்று கொஞ்சம் ஏலக்காய் பொடியை வாயில் அள்ளிபோட்டுக்கொண்டேன். அதனை பார்த்த பிறகே அப்பா அப்படி சொல்லியிருக்கிறார். கொஞ்சம் விவரம் தெரிந்த பிறகு, என் நண்பனிடம் கேட்டதற்கு, "ஏலக்காய் அதிகம் எடுத்துக்கொண்டால், விந்தணு உற்பத்தியை மட்டுப்படுத்தும்" என்கிறான். ஓ! இது தான் விஷயமா? என்பது அப்போது தான் புரிந்தது. மற்ற உணவுப்பொருட்களில் ஏலக்காய் கலந்திருந்தால் எந்த பிரச்சனையும் இல்லை.
ஒரு சிலர் மற்ற வாசம் தெரியக்கூடாதென்று, வெறும் வாயில் ஏலக்காய் போட்டு மெல்லுவார்கள். அது தான் ஆகாது. ஏலக்காய் போலவே எலுமிச்சையும் அளவுக்கு அதிகமாக எடுத்துக்கொள்ளக்கூடாது என்பார்கள். அதுவும் சுற்றி வளைத்துப் பார்த்தால், இதே சங்கதியில் வந்து முடிகிறது. ஒரு அளவுக்கும் மேல் எலுமிச்சை எடுத்துக்கொள்வது ஆண்களின் உடலுறவு திறனை பாதிக்குமாம். எதுவுமே அளவுக்கு மீறினால், நஞ்சு தான் என்பதை உணர்ந்துகொள்ள வேண்டும்.
இது குறித்து கொஞ்சம் இணையத்தில் தேடியும் பார்த்தேன். ஏலக்காய் இரத்தத்தை இளகச்செய்யுமாம். கோடை காலத்தில் ஏற்கனவே இரத்தம் இளகிய நிலையில் தான் இருக்கும். அப்போது ஏலக்காய் அதிகம் எடுத்துக்கொள்ளக்கூடாது. இதுவே குளிர் காலம் என்றால் தாராளமாக எடுத்துக்கொள்ளலாம். மொத்தத்தில் உடலுக்கு சூட்டை கொடுக்கும் அவ்வளவு தான். ஆண்கள் சாப்பிடக்கூடாது என்று குறிப்பிட்டு சொல்லக்காரணமும் இதுவே.