உத்தர பிரதேசத்தில் அமைந்துள்ள மதுரா மாவட்டத்தில் உள்ள காவல்நிலையம் ஒன்றில் நடந்துள்ள சம்பவம் ஒரு பக்கம் சிரிப்பை வரவழைக்கும் விதத்தில் இருந்தாலும் மறுபக்கம் நீதிபதிகளை காண்டாக்கும் வகையில் இருக்கிறது. அந்த காவல் நிலையத்தில் எலித்தொல்லை அதிகமாக இருப்பதாக சாக்கு போக்கு கூறி கோர்ட்டுக்கு சமர்ப்பிக்க வேண்டிய ஆதாரங்களை எல்லாம் காணாமல் போக செய்துள்ளனர்.
மதுரா காவல் நிலையத்துக்கு உட்பட்ட பகுதிகளில் கடந்த சில வருடங்களாக நடைபெற்ற தேடுதல் வேட்டையில் 700 கிலோவுக்கும் மேல் கஞ்சா பறிமுதல் செய்து வைக்கப்பட்டிருந்தது. தேசிய நெடுஞ்சாலை பகுதியில் கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட கும்பலை கைது செய்து அவர்களிடம் இருந்து கைப்பற்றிய கஞ்சாவில் முக்கால்வாசி காணாமல் போய் விட்டதாக கோர்ட்டில் கூறியுள்ளார்கள் அங்கு வேலை பார்க்கும் காவலர்கள். எங்களுடைய போலீஸ் ஸ்டேஷனில் எலித்தொல்லை அதிகம். பல வருடங்களாக ஏகப்பட்ட எலிகள் எங்கள் காவல் நிலையத்தில் கும்மி அடித்து வருகின்றன. பறிமுதல் செய்து வைக்கும் பல பொருட்களை எலிகள் தின்றுவிடுவதால் எங்களால் எந்த ஆதாரங்களையும் முறையாக சமர்ப்பிக்க முடியவில்லை என அந்த ஸ்டேஷனில் இருக்கும் போலீசார் கோர்ட்டில் தெரிவித்துள்ளார்கள்.
கஞ்சா கடத்தல் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருவதால் பறிமுதல் செய்த கஞ்சாவை கோர்ட்டில் சமர்ப்பிக்கும் படி நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்திருந்த நிலையில் அதற்கு காவல் நிலையம் சார்பாக கொடுக்கப்பட்டுள்ள பதில் மனு அனைவரையும் வெவ்வேறு கோணத்தில் யோசிக்க வைத்துள்ளது. கைப்பற்றி வைத்திருந்த கஞ்சாவில் ஏறத்தாழ 581 கிலோ கஞ்சாவை எலிகள் தின்று விட்டதாம். அதனால் கைப்பற்றிய மொத்தத்தையும் எங்களால் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க முடியாமல் போனது என சர்வ சாதாரணமாக கூறியுள்ளனர்.
கைப்பற்றிய கஞ்சாவை வெளியே வியாபாரம் செய்துவிட்டு கோர்ட்டில் வந்து எலிகள் தின்றுவிட்டதாக கம்பி கட்டுற கதை சொல்கின்றனர் என்பதை சூசகமாக புரிந்துகொண்ட நீதிபதிகள் இந்த சம்பவம் குறித்து தீவிர விசாரணை மேற்கொள்ள உத்தரவு பிறப்பித்துள்ளனர். வேலியே பயிரை மேய்வது போல் காவலர்களே கஞ்சாவை திருடிவிட்டு எலிகள் தின்று விட்டன என்று பொய் கூறியுள்ள சம்பவம் மதுராவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.