தமிழ் நாட்டில் மட்டும் கிடைக்கும் ஒரு சில அரிதான உணவு வகைகள், இப்போது தொலைந்துவிட்டன. தமிழ்நாட்டு உணவுகளுக்கு மட்டுமே உண்ணும் முன்னரே நாக்கில் நீர் சுரக்க வைக்கும் தன்மை அதிகம். ஊறுகாய் என சொன்னாலே வறண்ட நாக்கும் நீர் சுரக்கும்.இந்த தன்மை உலக உணவுகளுக்கு உண்டா? மேற்கத்திய உணவை தேடுவதில் நமது ஆரோக்யமிகுந்த தமிழ் உணவுகளை மறந்துவிட்டோம். விளைவு தெருவிற்கு தெரு ஐந்தாறு மருத்துவமனைகள்.அப்படி நாம் மறந்துபோன உணவு வகைகள்
#1. அம்புலி - இப்பொழுது மாட்டுக்கு மட்டும் காய்ச்சி ஊற்றும் உணவு . சாப்பிட ஆசையாக இருக்கும் உணவுவகை, சுவை வித்தியாசமானதாக இருக்கும்.
#2. கம்பங்கூழ்/களி -மற்றும் சிவப்பு மிளகாயும் புளியும் சேர்ந்த கரைசலுடன் குடிக்கும் போது, அதுவும் இரண்டு நாட்கள் வைத்திருந்து புளித்த வாசனையுடன் உண்ணுகையில் அமிர்தம் தோற்றுவிடும்.
#3. வேக வைத்த பனங்கிளங்கு, அவற்றைக் குப்பைக் குழியிலிருந்து பிடுங்கும் போதே வரும் மண் வாசனை நம்மை வசியப்படுத்தும். அந்தி சாயும் வேளையில் அம்மா கருங்காபி போட்டுவைத்து, வேலை முடித்து வரும் அப்பா,தாத்தாவிற்கு கொடுப்பார். அவர்களுடன் கதை பேசிக் கொண்டே சாப்பிடும் அந்த அனுபவம்!
#4. மா(விளக்கு) உருண்டை கேள்விப்பட்டிருப்போம். இதனை பொட்டுக்கடலை மாவுடன் அரிசி மாவும்வெல்லமும் கலந்து கொடுப்பார்கள்.உடலுக்கும் நல்லது எவ்வளவு சாப்பிட்டாலும் குழந்தைகளுக்கு ஒன்றும் ஆகாது..ஏனெனில் மாவில் வைத்து கொடுப்பது வெல்லம் சர்க்கரை அல்ல.
#5. ஆட்டுக்கல்லில் ஆட்டிய மாவில் செய்த இட்டிலியுடன் அம்மியில் அரைத்த சட்னி.இப்போது யாருக்கும் நேரமில்லை, அரைநாளில் செய்யவேண்டிய உணவை அரை மணிநேரத்தில் செய்துவிடுகிறார்கள். அரிசியை இரவே ஊறவைத்து, மூன்று மணிநேரம் ஆட்டி செய்த இட்லிக்கும் தற்போது நாம் உண்ணும் `இட்லிக்கும் பல வித்தியாசம் உண்டு.
#6. சந்தகை, தேங்காய்ப்பால் மற்றும் புளி பிரட்டி காம்பினேஷன். சில உணவகங்களில் விற்கிறார்கள் ஆனால் ரசம் போல ஊற்றவேண்டிய தேங்காய் பாலை சட்னி போல ஊற்றுகிறார்கள்.
#7. உளுந்தங்கஞ்சி, தினசரி குடித்து வந்தால் எலும்புகள் வலுப்பெறும். சுவையும் அருமையானதாக இருக்கும்.உப்பு அல்லது சர்க்கரை சேர்த்து உண்பவர்களும் உண்டு.
#8. பழைய சோறு கருவாடு காம்பினேஷன். இதை இப்போது சாப்பிடுபவர்கள் எண்ணிக்கை மிகவும் குறைவு.குழந்தைகள் முதல் பெரியவர்வரை சளி பிடித்தால் கருவாடு கொடுக்க சொன்ன மருத்துவர்களும் உண்டு.
#9. அடுத்து கருப்பட்டியை நன்கு காய்ச்சி ஊற்றி நல்லெண்ணெய் விட்டு செய்த உளுந்து வெந்தயக்களி.இது நெஞ்சு எலும்புகளுக்கு வலு சேர்ப்பவை.வயது வந்த பெண்களுக்கு கொடுக்கும் சத்து மிகுந்த உணவுகளில் ஒன்று.
#10. கருப்பட்டி சேர்த்து உரலில் இடித்த எள்ளு உருண்டை, சுவை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. பாட்டி இருக்கும் வீடுகளில் அடிக்கடி உரலில் இடித்து கொடுக்கும் ஸ்னேக்ஸ்.
இதை தவிர புழுங்கல் அரிசி கை முறுக்கு,வெண்பொங்கல், வாழைப்பூவடை, பூர்ண கொழுக்கட்டை, கேழ்வரகு புட்டுடன் வெல்லத்தை பதமாக வறுத்து எள் சேர்த்து இடித்த சிம்னி, தயிர்சாதம் உளுந்து அப்பளம் வடு மாங்காய். தமிழர்களின் பாரம்பரிய உணவு இன்னும் எத்தனை உணவுகள்! மேற்கத்திய தேடலில் பாரம்பரியத்தை தொலைத்துவிட்டோமா ?